முதன் முறையாக நான் பிரார்த்தனை செய்த போது கண்ணாடியால் கட்டிய தேவாலயத்தி லிருந்தேன் கூடியவர் அனைவரும் எழுந்து நின்ற பின்னும் வெகு நேரம் மண்டியிட்டிருந்தேன் கைகளிரண்டையும் புனித நீரில் அமிழ்த்தி திரித்துவத்தை என் இதயத்தில் வரைந்து என் சிறியவுடல் கேள்விக் குறி போல் வளைந்து மரவிருக்கை முழுவதிலுமாய்ப் படர்ந்து ஏசுவிடம் என் இக்கட்டைத் தீர்க்க வேண்டினேன் பிரார்த்தனைக்கு அவர் செவி மடுக்காததால் அமைதியை நாடினேன் அது என் பாவம்தனை எரிக்குமென நம்பி வாயிலூறும் எச்சிலில் நாவில் சர்க்கரையாய் கரைந்து போகுமென நம்பி தங்கிய கசப்பாய் தாழ்வுணர்ச்சியே நின்றது என்னுள் தூய்மையைப் புகுத்தும் முயற்சியாய் எடுத்துரைத்தாள் அன்னை என் அற்புதத்தை வளரலாம் எதுவானாலும் விருப்பப்படியென்றாள் ஆக நான் நிச்சயித்தேன் ஒரு ஆணாக வாழலாமென அற்புதமோ அற்புதம் பற்களில்லா சிரிப்போடு பலரோடு நான் ஆடி தெருவில் விளையாடி தேய்த்தேன் முட்டிகளை இலக்கோடு ஆடினேன் கண்ணாமூச்சி அதாகவே மாறினேன் மற்ற குழைந்தைகளால் ஆடமுடிடாத ஆட்டத்தில் எனக்கு வெற்றி உடற்கூற்றின் அதிசயம் நானன்றோ பதிலளிக்கப்படாத கேள்வி நானன்றோ தடுமாறும் ஆணுக்கும் தவிக்கும் பெண்ணிற்கும் இடையில் ஊசலாடும் ஈன ஜென்ம மன்றோ அகவைகள் பன்னிரெண்டு ஆனவுடனேயே ஆணாய் இருப்பது அழகாய்த் தெரியவில்லை என் முட்டிகளில் சிற்றாடை காணாமல் அத்தையும் சித்தியும் அங்கலாய்த்தனர் என் மனோபாவம் ஒரு தடையாய் இருக்கும் எனக்கொரு கணவனைப் பெற்றுத் தர என்றனர். என் வாழ்வின் நோக்கம் எதிர்பால் திருமணம் எனக்கென குழந்தைகள் சுமப்பதே என்றனர் அவர்களின் ஏசல்களை விழுங்கி நின்றேன் அதேபோல் ஏற்றேன் அவதூறுகளையும் தான் இயல்பு தானே என் கூட்டிலேயே நான் முடங்கிக் கிடந்தது. என் பள்ளியின் சிறுவர்கள் அதை என் அனுமதியின்றி திறந்தனர் என்னை அழைத்த பெயர் எனக்கு விளங்கவில்லை நானொரு லெஸ்பியன் என்றனர் ஆயினென் ஆண்மை பெண்மையை மீறியது பார்பியை விட நானொரு கென் என் உடலை நான் வெறுக்கவும் இல்லை அதன் போக்கில் விட்டுவிடும் அளவிற்கு அன்பு அது நான் வீற்றிருக்கும் வீடு வீட்டில் சில ஓட்டைகள் இருந்தால் வெளியேறுவதில்லை நாம் உள்ளே சுகமாய் ஓய்வெடுப்பதற்கு உகந்த சில மாற்றங்கள் செய்வீரன்றோ உற்ற விருந்தை உபசரிக்கும் அளவிற்கு உள்ளே நிற்க வலிமையான தரைகள் அமைப்பீரன்றோ என் அன்னை எண்ணுகிறாள் நான் மறையும் பெயரை ஏற்றுக் கொண்டேனென்று மியா ஹால் , லீலா ஆல்கார்ன் , ப்ளேக் ப்ராக்கிங்க்டன் போன்றோர் விட்டுச் சென்ற எதிரொலிகளை எண்ணி ஓசையின்றி நான் மரிப்பேன் என்பதே அவள் அச்சம் பஸ் நிலையங்களில் என்னைப் "வெட்கக் கேடு" என விவாதிப்பரே என்று நான் எனக்கே சமாதி சமைத்துக் கொண்டேன் என புலம்புகிறாள் நடமாடும் சவப்பெட்டி என்றழைக்கிறாள் செய்தித் தலைப்புகள் என்னைக் காட்சிப் பொருளாக்கி விட்டன "ப்ரூஸ் ஜென்னர்" இன்று எல்லோர் உதட்டிலும் எனக்கோ இவ்வுடலில் வாழும் கொடுமை சமத்துவம் பறைசாற்றும் பக்கங்களின்அடியில் ஒரு நட்சத்திரக் குறி எங்களை எவரும் மனிதர்களாய் எண்ணுவதில்லை ஏனெனில் நாங்கள் ஆவி புகுந்தவர்கள் என் பாலியல் உணர்வு ஒரு சூழ்ச்சியென்று மக்களின் எண்ணம் ஒரு வக்கிரத்தின் அடையாளம் அவர்களே அறியாமல் அவர்களை ஆட்டுவிக்கும் மாயம் அவர்களின் கண்களுக்கும் கைகளுக்கும் என் உடல் ஒரு விருந்து என் வக்கிரத்தை கண்டு களித்த பின் விரும்பாத பாகங்களை வெளியே தள்ள்ளுவர் வாந்தியெடுப்பது போல் என்னைத் திரும்பவும் மறைப்பலமாரியில் மாட்டுவர் மற்ற எலும்புக் கூடுகளுடன் நானே இங்கு ஈர்க்கும் காட்சிப் பொருள் மக்களை சவப்பெட்டிக்குள் நுழைப்பது எவ்வளவு சுலபம் என்று புரிகிறதா, கல்லறையில் அவர்களின் பெயர்களில் பிழைகள் சிறவர்களின் சீர்குலைவு இவர்களுக்கு புரியாத விஷயம். உயர்நிலைப் பள்ளி கூடங்களில் மறைந்து போகிறார்கள் மற்றொரு சாய்வுக் குறியாக மாறி விடுவோமோ என்ற அச்சம். வகுப்பறை அரட்டைகள் இறுதித் தீர்ப்பு நாளக.விடுமோ என்ற அச்சம் ஆயின் பெற்றோர்களை விட மாற்றுப் பாலினரை உலகம் இப்பொழுது ஒத்துக் கொள்கிறது இன்னும் எவ்வளவு நாளாகுமோ மாற்றுப் பாலினரின் தற்கொலைக் கடிதங்கள் மறைந்து தொலைவதற்கு எங்கள் உடல்கள் பாவத்தின் சின்னமல்ல என்று உணர்வதற்கு எங்கள் உடலை நாங்கள் நேசிக்கத் தொடங்கு முன் கடவுள் கருணையில்லாமல் இந்த உடைப்பைத் தரவில்லை அவர் கால்களைக் கழுவிய பழரசம் எங்கள் ரத்தமல்ல என் பிரார்த்தனைகள் இப்பொழுது என்னெஞ்சை அடைக்கிறது ஒரு கால் முடிவாக என் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டனவோ இல்லையென்றாலும் எனக்கு கவலையில்லை ஒரு கால் கடவுள் என் பிரார்த்தனைகளுக்கு செவி மடுத்து விட்டாரோ? உங்களுக்கு என் நன்றி (கரகோஷம்)